Container Icon

இப்போது நீயில்லை...


                                                      ப்போது
நீயில்லை...
நேற்றைக்கு நீ
இல்லாமல் இருந்தது
எவ்வளவு துக்கமாக
இருந்தது தெரியுமா.?

நீ இருக்கும்போது
உன்னோடு வாய்த்தகராறிலிருந்து
கை கலப்பு வரை செல்கிறது.

நீ இல்லாத இடைவெளியில்
பெருந்துயரத்தை அடைவது
உண்மை தான்.

அன்றைக்கு நீ
ஆசையோடு வாங்கி வந்த
எனக்குப் பிடித்த
சிக்கன் நூடுல்சை
வாங்க மறுத்தபோது
நாய்க்கு போட்டுவிட்டு
நீயும் சாப்பிடாமல்
பட்டினி கிடந்தாய்
எனக்குத் தெரியும்.

நாமிருவரும்
ஒருவருக்கொருவர்
எவ்வளவு தான்
பாசம் வைத்திருக்கிறோம் என்பது.

எனக்கு
முன்கோபம் அதிகம் தான்
ஒத்துக் கொள்கிறேன்.
அதற்காக என்மீது
கோபப்பட்டுக் கொண்டு
வீட்டை விட்டுச் சென்றால் எப்படி?

உன்முகம் மழித்த
பிளேடை கூட
அப்படியே போட்டுவிட்டு
சீரியல் பார்க்க உட்கார்ந்து விடுகிறாய்.

நான்
வேலைக்கு போய்வந்து
வீட்டில் எத்தனை வேலைதான்
பார்ப்பது
நமக்கு திருமணமாகி
இத்தனை ஆண்டுகளில்
எனக்கு உதவியாக வீட்டில்
ஒரு வேலையாவது
செய்திருப்பாயா?

உன்னை நினைத்தால்
ஒரு பக்கம் கோபமும்
மறுபக்கம் இரக்கமும்
வந்து தொலைக்கிறது.

சரி
இன்றைக்கென்ன புதிதாய்
கதவை தாழ்கூட போடாமல்
மாலை ஏழு மணிக்கே
தலையோடு போர்த்தியபடி
தூங்கிக் கொண்டிருக்கிறாய்...

ஐயோ...
உடல் குளிர்ந்து
பேச்சு மூச்சு இல்லையே
உனக்கு என்னாயிற்று?...



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பட்டணம் வந்தபோது....


பட்டணம் வந்தபோது....

ங்கங்கே நின்றவர்களெல்லாம்
அந்த இடத்தை விட்டு
காணாமல் போயினர்...

கூட்டத்தின்
நெரிசலுக்கிடையில்
புகுந்து சென்று கொண்டிருந்த
என் கையை
உரசிய படி புகையை கக்கியபடி
"வீல்" என்று கத்திக்கொண்டு
ஒரு மோட்டார் சைக்கிள்...

இரண்டு பெண்களின்
கையில் காய்கறி பைகள்
அதற்குள் தலையை நீட்டியபடி
இரண்டு வார பத்திரிகைகள்...

ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்தபடியே
இருவர் கார சாரமான
வாக்குவாதத்தில்...

ஒரு பேருந்து
பஸ் ஸ்டாப்பில் நிற்காமல்
போனதற்காக ஒருவன்
திட்டியபடியே என்னுடன்...

எல்லாவற்றையும்
பார்வையில் தேக்கி
மனதில் ஊற்றியபடி
திரும்பிய போது;

என் பாக்கெட் கீறலுடன்
கொண்டு வந்த பணமத்தனையும்
களவாடப்பட்டிருந்தது..



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தீபாவளி சிறப்புக் கவிதை: வாழ்வு தரும் தீபம்

First Published : 12 November 2012 04:21 PM IST





தீபம் வந்து சோக நெஞ்சை
பறக்க விட்டது - புது
இன்பம் வந்த பாதை எங்கும் வெளிச்சம் பரவுது

மின்வெட்டைக் கூட ஒளி
மிரட்டிப் பார்க்குது - மனம்
மத்தாப்பு போல இங்கே ஒளிருகின்றது.

சாதிமத பேதமின்றி
நாடு காணுது - ஒரு
வீடுகூட பாக்கியின்றி மகிழ்ச்சி துள்ளுது.

அக்கம் பக்கம் பாத்துப் பாத்து
மக்கள் நடக்குது - பிணி
கண்டவரின் வீட்டை மட்டும் விட்டு வைக்குது!

மின்னல் போல வெட்டும் ஒளி
கையில் மின்னுது - ஏழை
பட்டாசைக் கண்டு மனம் ஊஞ்சலாடுது

பார்த்துப் பார்த்து செய்த வெடி
பற்றி வெடிக்குது - லட்ச
பணம் அங்கே இங்கே கருகிக் கிடக்குது

கந்தகப் பொடி பட்டுப் பட்டு
தோல் இற்றது - வெடி
விபத்து வந்து உசுரும்கூட பாழாய்ப் போனது

Dinamaniகாலை மாலை உழைத்த வெடி
மகிழ்ச்சிப் படுத்துது - அதில்
மடிந்துபோன தொழிலாளியை நினைத்து அழுவுது!
Follow Us Follow Us on Facebook Follow Us on Twitter Follow Us on Google+

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நம்ம ஊரு தலைவரு!


First Published : 13 Aug 2012 06:01:32 PM IST

விலைவாசி ஏறுதுன்னு
ஏழைவயிறு காயுதுன்னு
மேடை கீட குரல் கொடுத்தாரு - ஒரு
கட்சியிடம் போய்ச் சேர்ந்தாரு!

சாதி சொல்லி ஓட்டு வாங்கி
சட்டசப போக்கிட்டு
எங்ககுற கேக்க மறந்தாரு - எங்க
குறைகள பறக்க விட்டாரு!

மணல்கொள்ள நிலங்கொள்ள
கூறுபோட்டு விற்று விற்று
தாதாபோல வலம் வந்தாரு - ஒரு
ரெய்டுல சிறை போனாரு!

விவசாயம் பெருகணும்
விவசாயி உயரணும்
போர்க்கொடி தூக்கி நின்னாரு - மேலும்
பதவியைத் தேடிக்கொண்டாரு!

சுயநலம் போகணும்
பொதுநலம் வளரணும்
நாளெல்லாம் பேசி வந்தாரு-அவர்
தன்னலம் பாத்துக்கிட்டாரு!

சாமிகீமி என்று சொல்லி
சாதிசனம் கூட்டிவச்சி
கும்பவிழா நடத்திப்புட்டாரு-தெப்ப
 குளத்தையே விலை பேசிட்டாரு!

மனுஒண்ணு வாங்கவே
நடையா நடக்கவச்சு
பொண்ணு ஒண்ண கண்ணுவச்சாரு-அத
அஞ்சாவதா சேத்துக்கிட்டாரு!

எந்தநாடு போனாலும்
நம்ம ஊரு போல இல்ல
பெருமையா பேசிவருவாரு-இவர்
அங்கிருந்தா நாடு என்ன கூறு! 
Tuesday, August 14, 2012 8:59 PM IST

                                 (கவிஞர் கோபால்தாசன் கவிதைகள்)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

agamariyaa mugamontru


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


சமூகம் காப்போம்

First Published : 19 Jul 2012 06:28:32 PM IST

Last Updated : 19 Jul 2012 06:37:34 PM IST
நாட்டு நடப்ப பேசி பேசி
நாளு போச்சுது - பெத்த
பிள்ளக் குட்டி எல்லாம் இப்ப
பிரிஞ்சு கெடக்குது!
-
ஆட்சி மாற்றம் வந்தும்கூட
மிஷின் ஓடலை - இந்த
மின்வெட்டு வந்து எங்க
பொழப்பு கூடலை!
-
நாளுக்கொரு விலைவாசி
வானம் போகுது - நல்ல
சோறுக்காக வயிறு தினம்
காத்துக் கெடக்குது!
-
ஓடி ஓடி ஒழச்ச காலும்
ஓஞ்சிக் கெடக்குது - எந்த
பாரமெல்லாம் சுமந்த தலையோ
சாஞ்சிக் கெடக்குது!
-
குடிச்சிக் குடிச்சி குடலு வெந்த
கும்பி பேசுது - இப்ப
திருந்தி வாழ நினைச்சும் கூட
உசுரு போகுது!
-
தப்புத் தப்பா சேத்த காசும்
தங்கிப் போகல- இப்ப
கோர்ட்டு வாசல் நடந்து நடந்து
செருப்பும் நிக்கல!
-
பருவம் வந்த பெண்ணிருந்தும்
பாசம் குறையல - அன்று
வயிறு வயிறு என்று பார்த்து
வயசு தங்கல!
-
எல்லக் காக்கும் வீரன் தவிர
எவரும் காக்கல - நாட்டில்
கொள்கைக்காக யாரு இருக்கா
சொல்லத் தெரியல!
-




(கோபால்தாசன் கவிதைகள்)


July 19, 2012  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புலரி

                                                  
ட்டிக் கொடுத்துத் தாலாட்டும் ஆறுதல்கள்
என இந்தத் தொகுதி முழுவதும் 
மனம் கொள்ளும் மெளன வலிகளை
உணரமுடிகிறது.
நம்மை நாமே
உற்றுப் பார்த்துக்கொள்ள-
சுய பரிசோதனை செய்துகொள்ளச் 
சொல்லும் மனசாட்சியின் குரல்தான்
கோபால்தாசனின் கவிதைகள்.
                                                 
                                   -கவிஞர் பழநிபாரதி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உயிர்க்கலம்

                                                 
ரொம்பக் காலத்துக்குப் பிறகு காதல் பற்றிய மென்மையான சொற்களைக் கொண்ட ஒரு நெடுங்கவிதையை வாசித்த நிறைவு எனக்கு.......
                               
          -பொன்னீலன்
              சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கதைத்தல்

                                                      
ரலாற்றிலிருந்து நாம் எதையுமே கற்கவில்லை என்பதைத்தான் வரலாற்றிலிருந்து கற்கிறோம் என்பார் பெர்னாட்ஷா.
                             
                                    வரலாற்றிலிருந்து.....வேண்டாம்.
                                     கவிதைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்
                                      வாருங்கள் !
      
                                                                      -நெல்லை ஜெயந்தா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அச்சாணி

                                               

"மல்லாந்து கிடக்கும் 
விசயங்கள்
உள்வாங்குகையில்
எழுப்பப்படும்
வினாக்கள்
அநாகரிகத்தின் 
வெளிப்பாடுகளாக இருப்பின்
அவை
ஒரு நன்மையின் தேடுதலுக்காய்
வெளியேறும் உயிர்களே"     
                   
                -உண்மையில் இதுதான் 'அச்சாணி ' கவிதைத் தொகுப்பு மூலம்                                                             கோபால்தாசன் கண்டு அடைந்திருப்பதும் ...............................................
                                         -யுகபாரதி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விழியோசை

                                                      
'தமிழினம்' எனும் கவிதையில்,
உயிர் குரல் -உளக்கை -கற்புசொல் -மண்பெண் ஆகிய உவமையுடன் கூடிய உருவகச் சொற்கள் புதிதாக ஆக்கப்பட்டுள்ளன .இந்த முயற்சி தமிழுக்கு புதிய கலைச் சொற்களைத் தந்து தமிழை உயர்த்தியுள்ளது...
                                       
                                                          -  டாக்டர் கா.காளிமுத்து
                                                                முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிராகரிப்பு

                                                  
நிராகரிப்பில் பிறப்பதுதான் 
புதுக்கவிதை...

கோபால் தாசனின்
'நிராகரிப்பு'
அர்த்தமுள்ளது
அழகானது...
                                -கவிக்கோ அப்துல்ரகுமான்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தலைக்குளம்

                                                
ன் கண்களை 
வெடிகுண்டால்
தாக்கினாலும்
குருடாக இருந்து-
அமைதியின் கண்களைத்
திறக்கப் பாடுபடுவேன்...

      இளைஞனே! உனது எழுத்துக்கள் பாராட்டுக்குரியது, என்றும் எனது வாழ்த்துக்கள் !  
                            -அன்புடன் பாரதிராஜா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தண்ணீரில் மிதக்காத தாமரைகள்

                                                                                         
"அவள் பார்வையில் இதயத்தை நெய்து 
ஆடையாகக் காதலை பரிசளித்தவள்"             

"நெஞ்சைக் காயப்படுத்திய 
எதிர்ப்பு முட்களை
நம்
வாழ்க்கைக் கட்டடத்திற்கு
வெளியே வேலியாக
அமைப்போம் வா "

  -நிறைய எழுதுவதற்குரிய திண்மை இருக்கிறது இவரது 
எழுத்தில் .......
                           -கவியரசு வைரமுத்து

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மக்கா


மண்வாசனை மிக்க கவிதைகள்

                         -பொன்னீலன்
ருவங்கள் கடந்து போகிறவைதான். கள்ளமறியாத இளமை அனுபவங்களோ, என்றும் அழியாதவை, தாய்ப் பாலாக உணர்வில் நின்று, கலைஞருக்கு ஆற்றல் ஊட்டுபவை. அந்த ஆற்றலில் காலூன்றித்தான் கலைஞர்களின் சாதனைகள் வளர்ந்து கிளை விரித்துப் பூத்துக் காய்க்கின்றன.
கனவு போல ஒவ்வொருவரும் கடந்து செல்லும் அந்த இளமையை ஆசையோடு அசை போட்டுப் பதிவு செய் திருக்கிறார் கோபால்தாசன் “மக்கா” என்னும் தன் படைப்பின் ஊடாக.
இதில் தத்துவம் தேடுவோருக்கு எதுவும் இல்லை. இலக்கிய “இசக்”கோட்பாடுகளால் அளப்போர்க்கும் எதுவுமில்லை. அதிர்ச்சி தரும் சம்பவங்களைத் தேடு வோருக்கு வட்டம்தான் மிஞ்சும். பின் என்னதான் இருக்கிறது? வாழ்வு இருக்கிறது. அசல் வாழ்வு.
குமரிமாவட்டக் குழந்தைமை வாழ்வு என அதைக் குறுக்கி விட முடியாது. வாழிடப் பின்னணிகள் வேறு படலாம். அதன் ஊடாக அனுபவங்களின் வடிவங்கள் வேறுபடலாம். சாராம்சம் வேறுபட முடியாது. இந்தச் சாரம் குமரி மாவட்டத்துக்குரிய தனிப்பட்ட சூழலில், சின்னஞ்சிறு மலர்களாக மொட்டவிழ்த்திருக்கிறது.
கவிதையை எழுதுவதற்குக் கவிமனம் வேண்டுமென்பது எல்லாருக்கும் தெரியும். எழுதுவதற்குக் கவிமனம் எவ்வளவு தேவையோ, கவிதையை அனுபவிப்பதற்கும் கவிமனம் அவ்வளவு தேவை. வெறும் கவிமனமல்ல, கலையைக் கலையாகப் பார்க்கும் அதில் தன் இன அடையாளங்களைத் தேடி ஏமாந்து போகாமல் கனிந்து விசாலம் கொள்ளும்-கவிமனம் தேவை.
கவிதையின் சமூகப் பின்னணியை உணர்ந்து, வரலாற்றோடு பொருத்தி, சமகாலத்தோடு ஒப்பிட்டு, நெகிழ்ந்து அணுகும் போதுதான் அதுதன் இதழ்களை அவிழ்த்துத் தன் அழகை வாசகருக்கு வெளிப்படுத்தும். அத்தகு கவிமனத்துக்கு இத் தொகுப்பில் அனுபவிக்க அருமையான புள்ளிகள் பல உள்ளன.
இங்குப் பதிவு செய்யப்பட்டிருப்பவை நிஜமான வாழ்க்கை. இவை பெரும்பாலும் விடுதலை பெற்ற இந்தியாவின் தொடக்க காலக்காட்சிகள், அந்த வாழ்வின் சாரம் நிறைந்த சிறுசிறு அணுக்கள் காட்சிகளாய் விரிகின்றன. “நான்” என்பதாகச் சுருங்கிக்கொண்டிருக்கும் இன்றைய சமூகம் இழந்துகொண் டிருக்கும் அன்பு, இணக்கம், வேடிக்கைகள், விளையாட்டுகள், உதவிகள், சின்னஞ்சிறிய ஆசைகள், மென்மையான வெட்கங்கள் எனத் தற்செயலாக வாழ்வு சந்திக்கும் கணங்களில் மின்னும் தவிர்க்க இயலாத வெளிச்சப்புள்ளிகளை, மின்னல் கீற்றுகளை, அழிக்க இயலாத கருப்புத் தழும்புகளை நுட்பமாகப் பதிவு செய்கிறது கவிதை.
பிரபஞ்சத்தை உயிர்ப்பிக்கும் மாபெரும் ஆற்றல் அன்பு. அந்த ஆற்றல் எப்படி ஒரு காலத்தில் வளமாக இருந்தது என்பதைப் பல கவிதைகளினுள்ளே கண்டு வியக்கமுடியும். அம்மாவின் அன்பு, உடன் பிறப்புகளின் அன்பு, நட்புகளின் அன்பு, உழைப்பாளிகளின் அன்பு, என அன்புகளில் பல தினுசுகள் இங்கே பதிவாகியிருக்கின்றன. அந்த அன்பின் கனிந்த ருசி மிக்க இளமை வடிவம் காதல். இந்தக் காதலுக்கு அடியில் கொதித்துச் சூடேற்றிக்கொண்டிருப்பது காமம். சமூகத் தோலுக்கடியில் தோலைக்கீறும் தினவோடு சதா கொதித்துக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் காமத்தின் கீறலும் மீறலும் கூட இங்கே பதிவு செய்யப்படுகிறது. ஆபாச இலக்கியப் பரிமாற்றத்தின் ஊடாக.
கிராமக் கோயில் என்பது வைதீக அதிகாரத்தின் இருப் பிடமாக மாறிக்கொண்டிருக்கிறது இன்று. அதே கோயில் நாம் குழந்தையாக இருந்த போது குதூகலக் கொண்டாட்டத்தின் மையமாக இருந்ததைக் காட்டுகிறது இவர் கவிதை. குழந்தை மையை அனுபவிக்கத் தெரியாத ஆதிக்க அப்பனைத் தோலுரிக்கிறது. முதலாளிக்கு/அதிகாரிக்கு உழைத்துக் கொடுக்கும் நேர்மையான தொழிலாளியின் பரிதாப நிலையைக் காட்டுகிறது.
குளத்தில் கூடிக் குளிப்பது என்பது கிராமப்புற
இளைஞர் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று. குளித்து முடியும் போது குளித்தவர்களின் கண்கள் சிவந்து போய்விடும். கவிஞரோ, குளத்தின் கண்ணைச் சிவக்க வைத்ததாக எழுதுகிறார். இது ஓர் அருமையான உத்தி. இப்படி உத்திகளை அங்கங்கே காண முடிகிறது.
இன்னொரு கவர்ச்சிகரமான விசயம், கவிதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டாரச் சொற்கள் “மயக்கி” என்று ஒரு சொல் குமரிமாவட்டக் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் பல நிறம் கொண்ட சொல். அறிவை “மயக்கி” என்பது ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்தறிய முடியாதபடி செய்தல் என்னும் பொருளில் வரும். இங்கேயோ, அது பல உணவுப் பொருட்களைச் சேர்த்து ஒன்றாகச் சமைத்து அகப்பையால் நசுக்கிக்கலந்து ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்தறிய முடியாமல் கரைந்து போகச் செய்வது என்பது பொருள். கிட்டும், ஏனம், கறக்கி (சுழற்றி) இப்படிஇப்படி இன்னும் அனேகச் சொற்கள்.
சில அம்சங்களில் எனக்குக் குறைகளாகவும் சில படுகின்றன. சில கவிதைகளின் முடிவில் கவிஞர் படிப்பினை சொல்ல முன் வந்திருக்கிறார். இது கவிதையின் ஆற்றலைக் கெடுத்துவிடும் எனத் தோன்றுகிறது. அடுத்தது, கவிதைகளுக் குள்ளே பயின்று வரும் தேவையில்லாத இலக்கியச் சொற்கள். சர்க்கரைப் பொங்கலில் கல் போல, அவை ருசியைக் கெடுக்கின்றன. சாதம் வடித்தல், அவுங்க, ஊஞ்சல், இப்படிப்பல, இவை போழ்து, இப்படியான சொற்கள் கவிதையின் இயல்புக்கு இடைஞ்சல் செய்கின்றன. கவனித்து நீக்கியிருக்கலாம். மூன்றா வதாக, சில இடங்களை இன்னும் இறுக்கியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. இவற்றை நீக்கினால் கவிதையின் தரம் இன்னும் மேம்படும். கவிஞர் கோபால்தாசனை மனமார வாழ்த்துகிறேன்.
மக்கா
ஆசிரியர் : கோபால்தாசன்
வெளியீடு : அறிவுப் பதிப்பகம்
விலை : ரூ.45.00 
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகத்தில் வெளியான விமர்சன கட்டுரை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு புதிய புரட்சி




ஒரு புதிய புரட்சி 
கோபால்தாசன்

ற்காலத்து மனிதனிலிருந்து அடிமைத்தனம் என்பது துவங்கிவிட்டது. அது மனிதனை மனிதன் கொன்று சாப்பிடுவதிலிருந்து. மிருகங்களை அடித்து ஒன்றாய் சாப்பிடுவதிலிருந்தும், பிறகு நீ அசைவம், நான் சைவம். நீ கறுப்பு, நான் வெளுப்பு. எனக்கு நீ அடிமை, நான் உனக்கு எஜமானன் இப்படி அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் ஒருவனை இன்னொருவன் ஆட்கொள்ள தன் வலிமையை தயார்படுத்திக் கொண்டான்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், வதைக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்களுடைய உரிமைகள், உடைமைகள், நிலங்கள் பறிக்கப்படுவதை தட்டிக் கேட்பதற்கும், கேள்வி கேட்பதற்கும் அப்பாவி அடிமைகளுக்கு அப்போது திராணியில்லாமலேயே போய்விட்டது.

மிருகங்களுக்குக் காட்டப்படுகின்ற பரிவு கூட மனிதனுக்கில்லை. நாய்களுக்கு இடப்படுகின்ற உணவுகூட பாவம் மனிதனுக்கில்லை. அவர்கள் ஏதாவது கேட்டால் அடக்குமுறைகளும், துன்புறுத்தல்களும், சாட்டை அடிகளும்தான் மிஞ்சும்.

இப்படி காலங்காலமாய் அடிமைப்பட்டுச் சாகும் கொடுமைகளிலிருந்து மீட்பதற்காக உலக நாடுகளில் சில தலைவர்கள் ஆங்காங்கே முளைத்தார்கள். அவர்களில் காந்தி, அம்பேத்கர், பெரியார், நெல்சன் மண்டேலா, சேகுவேரா இன்னும் பலர்.

கொத்தடிமைகளை விலைக்கு வாங்கி விற்கும் முறை, அதுவும் விளம்பரம் செய்து விற்கும் பழக்கம் அதாவது ஒரு மாட்டைப் போல் கிள்ளிப் பார்த்தும், குத்திப் பார்த்தும், எலும்புகளைத் தட்டிப் பார்த்தும், அடிமைகளை வாங்குவது மனித இனத்துக்கே அவமானமான செயலல்லவா.

இது; அமெரிக்க வெள்ளையினர் கறுப்பர்கள் மீது சுமத்தப்பட்ட அல்லது ஏவப்பட்ட கீழ்த்தர செயல் என்றே கூறலாம். இந்நிலையை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தோமானால் உலகமக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாய்ச் சென்று அமெரிக்காவின் மீது கல்லெறியத் தூண்டும்.

அந்தச் செயல்பாடுகளை, அடிமைத்தனங்களை, அடக்குமுறைகளை வேரோடு கிள்ளி எறிவதற்காகவும், ஆலமரமாய் படர்ந்திருந்த கொடுமைகளின் ஆணிவேரில் விஷஊசியாய் அவதரித்தவர்தான் மார்ட்டின் லூதர் கிங். உலக நாடுகளின் எந்தக் கூட்டத்திலும் தன்னைக் கதாநாயகனாகவோ அல்லது தன்னை அரசனாகவோ தனக்கென ஒரு சிம்மாசனத்தை தயார்படுத்திக் கொள்ளும் சூட்சுமம் அமெரிக்காவைத்தவிர வேறு யாருக்கும் வராது. மற்றவனை ஏமாளியாக்கவும் அல்லது பித்தனாக்கவும் நினைக்கும் போக்கு அமெரிக்காவுக்கு கைவந்த கலையல்லவா. இது இன்று நேற்று வந்த பழக்கமல்ல பிறப்பிலேயே ஊறிப்போன பழக்கமென்றே கொள்ளலாம்.

அடிமைத்தனமும், பிள்ளையைக் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதும் போன்ற தீய காரியங்கள் செய்ய வேண்டுமென்றால் அமெரிக்காவில் போய்ப்

பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அமெரிக்காவின் வரலாற்றைத் தோண்டிப் பார்த்தோமானால் உள்ளிருந்து பல்லாயிரக்கணக்கான எலும்புக்கூடுகளும், கொலை, கொள்ளைகளும் மர்மமான உண்மைகளும் கிடைக்கும்.

மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கையை மிக நுட்பமாகத் தமிழாக்கம் செய்து அதனை ஒரு திரைப்படம் போல ஓடவிட்டிருக்கிறார் நூலாசிரியர் பாலு சத்யா. இவரின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம். மேலும் மாபெரும் புரட்சி வீரரின் பயணம் இவ்வளவுதானா 136 பக்கங்களில் முடிந்துவிட்டதா? என்ற கேள்வி எழும். ஆமாம், இன்னும் அவரின் வாழ்க்கையில் ஏதோ சில விடயங்கள் விடுபட்டுள்ளனவா என்ற கேள்வியோ ஏக்கமோ கூடவே எழும்.

அது வேறொன்றுமில்லை; நூலினைத் திறந்து பார்த்தால் தெரிவது எல்லாமே ஒரே அறைகூவல்களும், கூக்குரல்களும், சண்டைகளும், வெட்டு, குத்துகளும், துப்பாக்கிச் சூடுகளும், தீவைப்பு சம்பவங்களும், ரத்தக் களரிகளும்தான் நூலெங்கும் பரவியிருக்கும் அல்லது பெருகியிருக்கும்.
இது; ஒரு போராளியின் வாழ்க்கைப் பாதை என்பதால் இப்படித்தான் இருக்கும் என மேஜை மீது அடித்துச் சொல்கிறது நூல். ஏன்?

மார்ட்டின் எனும் சீலரின் முகமும், பேச்சும், வீறுநடையும் அகிம்சைவாதமும் நூலெங்கும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. புத்தகத்தை மூடிய பின்னும் அவரின் பேச்சு காதுகளில் ஒட்டிக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டேயிருக்கும். நடக்கும்போதோ எதிரே எந்த வெள்ளையைக் கண்டாலும் நாளங்களைச் சுண்டவைக்கும் தாக்கத்தை நூல் ஏற்படுத்துகிறது.

உலக நாடுகளில் எங்கெல்லாம் அடிமைத்தனம் தன் கோரநாவினை சுழற்றி ரத்தம் குடிக்கின்றதோ அல்லது கடித்துக்குதறுகின்றதோ அங்கெல்லாம் குரல்கொடுப்பதற்கும் நெருப்புப்பந்தை கையில் உருட்டி எறிவதற்கும் தூண்டும் விதமாக அமையும் இந்தப் போராளியின் வாழ்க்கைப் பாதையை நுகர்ந்தால்.

கறுப்பினர் வெள்ளையினர் மனிதனால் வகுக்கப்பட்டது. அதைச் சீர்செய்ய மனிதனொருவனால் தான் முடியும். அடிமைத்தனத்தை உடைப்பதும் கிள்ளியெறிவதும் அகிம்சைதான் வழியென்பதற்குச் சான்று மார்ட்டின் லூதர் கிங்.

சாணிப்பாலும், மாட்டிற்குப் பதில் பெண்களைக் கட்டி உழுததும், கல்மாலை எனச் சித்திரவதைகளிலிருந்து மீண்டு வந்த போதும் தலித் மக்களது சோகமும் துயரமும் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பது ஒருபுறம்.

ஓர் அடிமை உருவாக்கப்படவில்லை. பிறக்கிறான். அவன் தாயின் கருவறையிலிருந்தே தன் உரிமையத்தனையையும் இழக்கிறான். அவன் பிறப்பின் போது சிந்தப்படுகின்ற உதிரத்தோடு அழுகையும் நிரந்தரப்படுத்தப்படுகின்றது.

வேலைக்கு அமர்த்தப்படும் கறுப்பின அடிமைகளுக்கு வாரத்துக்கு எண்பத்தைந்து முதல் நூற்றுப்பத்து மணிநேர வேலை பார்த்த வலியைத்தான் பெற முடிகிறது. இரண்டுவேளை அரிசிப் பொரியும், கொள்ளும் போட்டுவிட்டு எஜமானனோடு ஒரு நாளைக்கு ஆறு முறை படுத்து எழும் வலியைப் பதினேழு வயதுப் பெண் தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையை வலிகளைக் கூறும் போக்கு எந்த நெஞ்சுக்குள்ளும் தீயை வாரிப்போடும் உணர்வு ஏற்படும்.

இதுதான் அமெரிக்க வெள்ளையினரின் லட்சணமா கோட்பாடா? என்று கேட்கத் தோன்றும். இனவெறியின் கோரத் தாண்டவம் அப்படியும் முடிந்தபாடில்லை. கிங் அட்லாண்டாவில் படித்தபோது புக்கர் டி வாஷிங்டன் ஸ்கூலுக்கு பஸ்ஸில் போகும்போது கறுப்பினக் குழந்தைகள் பஸ்ஸின் பின்னிருக்கையிலும் வெள்ளையினக் குழந்தைகள் பஸ்ஸின் முன்னிருக்கையிலும் தள்ளப்படும் அவலம் கண்டு கிங் கொதித்துப் போகிறார்.

அப்போது அவர் மனதுக்குள் நினைத்துக்கொள்வது வழக்கமாம் “என் மனம் முன்னிருக்கையில் இருப்பதை யாராலும் தள்ளமுடியாது” என்பதே.

அட்லாண்டாவில் இருந்த மோர் ஹவுஸ் காலேஜ் கறுப்பின மாணவர்களின் கல்லூரியில் படிக்கும்போது இங்கிலாந்து எழுத்தாளர் ஹென்றி டேவிட் தொரோ எழுதிய ‘ஒத்துழையாமை’ என்னும் கட்டுரையைப் படிக்கையில் ஆயுதம் ஏந்தாமல் அகிம்சாவழியில் ஒரு போராட்டம் நடத்த முடியுமா என்ற கேள்வியில் மனம் அடிக்கோடிட்டுக் கொள்கிறது.

பாஸ்டனில் தத்துவ, இறையியல் பாடங்களைப் படித்தாலும் அவரை முழுதும் ஆட்கொண்ட அகிம்சை போராட்டம்தான் 1955ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதியில் கிங் பாஸ்டனில் டாக்டர் பட்டம் பெற வைக்கின்றது.

எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப்பார்க்க வெட்கப்படும் கூச்ச சுபாவமுள்ள கிங்கின் வாழ்க்கையில் காரெட்டா என்ற பெண் அறிமுகமாகிறார். பின்பு 1953 ஜூன் 18இல் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். மார்ட்டின் பின்புலத்தில் பாதிரியாராக இருந்தாலும் முற்காலத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், தான் பாதிரியாராகத்தான் வரவேண்டும் என்ற ஆசை அவருள் இருப்பதை நூல் விவரிக்கிறது.

“கடவுளை முன்னால் நிறுத்து. மார்ட்டினை பின்னால் நிறுத்து. எல்லாம் சரியாகிவிடும்” எனும் உள்ளக்கிடக்கையை அவர் நம்பிக்கைவிதையாகத் தூவுகிறார். 1955 டிசம்பர் 1இல் மாண்ட்கோ மெரியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பகல் முழுக்க டெய்லர் வேலை பார்த்துவிட்டு ஒரு நீக்ரோ பெண் வீட்டுக்கு போக ஒரு பஸ்ஸில் ஏறிக் கொள்கையில் இனவேறுபாடுகளில் ஏற்படும் தகராறு அதன் மூலம் ஏற்படும் தீர்வு ஒரு மிகப் பெரிய போராட்டத்திற்கு அஸ்திவாரமாகின்றது.

வெள்ளையர்கள் ரிசர்வ் செய்யாத சீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் கறுப்பின மக்கள் எழுந்து இடம் கொடுக்க வேண்டும். அல்லது கைது செய்யப்படுவார்கள். பஸ்ஸை இயக்கும் கறுப்பினரை “ஏய் நீக்ரோ, கறுப்புக் குரங்கு, கறுப்பு மாடு” என்ற கேடான அவச்சொல்லைக் கொண்டு கூப்பிடுவது வழக்கம்.

இவ்வகையில்; பஸ் புறக்கணிப்பு போராட்டம் மூலமாகக் கிங்கின் போராட்டம் வலுத்து மாண்ட்கோ மெரி பஸ் புறக்கணிப்பில் வெற்றி பெறுகிறார் கிங். அத்தோடு அவரது சுதந்திர தாகம் தணிந்தபாடில்லை. மாண்ட்கோ மெரி பஸ் புறக்கணிப்பு போராட்டத்துக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ஆதரவின் எதிர்ப்பாளர்கள் கறுப்பினமக்களின் வீடுகளுக்கும், சர்ச்சுகளுக்கும் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்துகிறார்கள்.

இச்சம்பவம் கிங்கை உருக்குலைய வைக்கிறது. அப்போது, ‘கடவுளே! மாண்ட்கோ மெரியில் நடக்கும் இந்தச் சுதந்திரப் போராட்டத்தில் ஒருவர்கூட உயிரிழக்கக் கூடாது. ஒரே ஓர் உயிர் பறிபோக வேண்டுமென்றால் கூட அது என்னுயிராக இருக்கட்டும்’ என அந்த மனிதநேயம் வான்நோக்கி இரண்டு கைகள் தூக்கி விரித்தபடி கோரிக்கை விடுக்கிறது.

இந்நேரத்தில் 1957 அக்டோபர் 23இல் கிங்கிற்கு மார்ட்டின் லூதர் கிங் III மகன் பிறக்கிறார். இப்படி நூலை படித்துக்கொண்டே செல்கையில் இவ்விடத்தில் நின்று நிமிர்ந்து சற்று மூச்சு வாங்கவும் முகத்தைத் துடைத்துக் கொள்ளவும் அவகாசம் அளிக்கிறது நூல்.

மார்ட்டின் கத்தியால் குத்தப்படுகிறார். அப்போது ஒரு வெள்ளையின சிறுமி அனுதாபச் செய்தியில் “உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை நினைத்து நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று அச்செய்தி குறிப்பிடுவதாய் நூல் பகர்கிறது. இது மார்ட்டினின் அகிம்சா வழிக் கொள்கைக்குக் கிடைத்த சிறப்பு என்றே கூறலாம்.

1959 பிப்ரவரி 3இல் மார்ட்டின் தன் மனைவி மற்றும் நண்பர்களோடு இந்தியா வருகிறார். இந்தியப் பிரதமர் நேருவை சந்தித்துப் பேசுகிறார். காந்தி ஒரு கைப்பிடி உப்பை அள்ளி ஏகாதிபத்திய அரசின் கொள்கைகளை உடைத்தார் என்ற செய்தியை உள்வாங்கிக் கொண்ட மார்ட்டின் அகிம்சையைத் தவிர வேறெந்த ஆயுதமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறார். இந்திய பயணத்திற்குப் பின் மார்ட்டினின் மனம் தியானம், அமைதி என மாற்றங் கொண்டிருப்பதை உணர்கிறார்.

செப்டம்பர் 15, 1963 வாஷிங்டனில் தொடர் வன்முறை கலவரங்களில் கறுப்பினக் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். செப்டம்பர் 18ஆம் தேதி அந்தக் குழந்தைகளுக்கான இறுதிச் சடங்கில் மார்ட்டின் “இந்தக் குழந்தைகளோடு நாகரிகமும் மரியாதையும் புதைக்கப்பட்டு விட்டன” என நெஞ்சுருகுகிறார்.

1964, டிசம்பர் 10ஆம் தேதி நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவில் நோபல் பரிசை மிக இளவயதிலேயே பெற்றவரும் இவர்தான் எனப் போற்றப்படுகிறார். பின்பு அவர் ஆற்றும் உரையானது கறுப்பின மக்களுக்கான விடுதலையைக் கோரி ஒவ்வொரு வார்த்தையும் வெள்ளையரின் நெஞ்சக்கதவை சவட்டி உடைப்பதாய் அமைகிறது.

1965 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி கறுப்பின மக்களுக்கான வாக்களிக்கும் உரிமைச் சட்டம் ஜனாதிபதி ஜான்சன் என்பவரால் கையொப்பமிடப்படுகிறது. லாஸ் ஏஞ்சல் நகரில் எழுந்த சிறு மோதல் ஒரு பெரும் கலவரமாக வெடிக்கிறது. இதில் 34 கறுப்பின மக்கள் கொல்லப்படுகின்றனர். 150 மாவட்டங்களில் தீவைப்பு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1966ஆம் ஆண்டு ஜூலை 10இல் சிகாகோ நகரில் 45 ஆயிரம் பேர் கொண்ட பேரணியை மார்ட்டின் நடத்துகிறார்.

வியட்நாம் யுத்த எதிர்ப்புப் போராட்டத்தில் அமெரிக்கா மீதான பாய்ச்சலே மார்ட்டின் உயிருக்குக் குறிவைக்கிறது என்பதும், ஜேம்ஸ் ஏர்ல் ரே என்ற இளைஞன் தான் சுட்டதாக ஒப்புக்கொண்டாலும், அந்தக் கொலையின் பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் இன்று வரை அவிழாமலேயே கிடக்கின்றன என்று நூலாசிரியர் பாலு சத்யா விடுக்கும் கேள்வி நம்மையும் கேட்க வைக்காமலில்லை.



                                                         நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகத்தில் வெளியான விமர்சனம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

னக்கான வீடு இது
என் சிந்தனையின் பட்டறை என்றும் கூடச் சொல்லலாம்
தோற்றம்
பழைய கட்டடமாக இருந்தாலும்;
உள்ளிருக்கும் ஒவ்வொரு அறையும் 
என்னுள் இருக்கும் உறுப்புகளாய்...
மிளகாய் விதை இட்டு
முளைத்த செடிகளும் உண்டு...
திருட்டுத்தனமாய் பிடுங்கிவந்து
நட்ட பூச்செடியும் உண்டு
அப்பா அம்மா இருந்தும்
இல்லாத அந்த பருவம் 
அவிழ்த்து விட்ட கன்று போன்றது...
பக்கத்து வீட்டிற்க்கும் 
என் வீட்டிற்க்கும்
மதிற்சுவர் பொது என்பதால் 
அடிக்கடி
அம்மாவும்,பக்கத்துவீட்டு அக்காவும்
தலையை நீட்டி பேசிக்கொண்டிருக்கும் பேச்சில்
அதிகம்
குழம்பு,கூட்டு வாசனையே
அடிக்கும்
ஒரு நாள்
இடியோடு பெய்த அடைமழையில் 
வீட்டின் பின்புறச் சுவர்
இடிந்து விழுந்ததில் 
பிரியமாய் வளர்த்த 
நாய்க்குட்டியும்
பூச்செடிகளும்
இறந்து போகவே
அவ்வீடு ஏனோ 
பிடிக்காமலேயே போய்விட்டது..
             _கோபால்தாசன்
                  {www.thinnai.com இல் வந்தது}

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS