இப்போது
நீயில்லை...
நேற்றைக்கு நீ
இல்லாமல் இருந்தது
எவ்வளவு துக்கமாக
இருந்தது தெரியுமா.?
நீ இருக்கும்போது
உன்னோடு வாய்த்தகராறிலிருந்து
கை கலப்பு வரை செல்கிறது.
நீ இல்லாத இடைவெளியில்
பெருந்துயரத்தை அடைவது
உண்மை தான்.
அன்றைக்கு நீ
ஆசையோடு வாங்கி வந்த
எனக்குப் பிடித்த
சிக்கன் நூடுல்சை
வாங்க மறுத்தபோது
நாய்க்கு போட்டுவிட்டு
நீயும் சாப்பிடாமல்
பட்டினி கிடந்தாய்
எனக்குத் தெரியும்.
நாமிருவரும்
ஒருவருக்கொருவர்
எவ்வளவு தான்
பாசம் வைத்திருக்கிறோம் என்பது.
எனக்கு
முன்கோபம் அதிகம் தான்
ஒத்துக் கொள்கிறேன்.
அதற்காக என்மீது
கோபப்பட்டுக் கொண்டு
வீட்டை விட்டுச் சென்றால் எப்படி?
உன்முகம் மழித்த
பிளேடை கூட
அப்படியே போட்டுவிட்டு
சீரியல் பார்க்க உட்கார்ந்து விடுகிறாய்.
நான்
வேலைக்கு போய்வந்து
வீட்டில் எத்தனை வேலைதான்
பார்ப்பது
நமக்கு திருமணமாகி
இத்தனை ஆண்டுகளில்
எனக்கு உதவியாக வீட்டில்
ஒரு வேலையாவது
செய்திருப்பாயா?
உன்னை நினைத்தால்
ஒரு பக்கம் கோபமும்
மறுபக்கம் இரக்கமும்
வந்து தொலைக்கிறது.
சரி
இன்றைக்கென்ன புதிதாய்
கதவை தாழ்கூட போடாமல்
மாலை ஏழு மணிக்கே
தலையோடு போர்த்தியபடி
தூங்கிக் கொண்டிருக்கிறாய்...
ஐயோ...
உடல் குளிர்ந்து
பேச்சு மூச்சு இல்லையே
உனக்கு என்னாயிற்று?...
0 comments:
Post a Comment