எனக்கான வீடு இது
என் சிந்தனையின் பட்டறை என்றும் கூடச் சொல்லலாம்
தோற்றம்
பழைய கட்டடமாக இருந்தாலும்;
உள்ளிருக்கும் ஒவ்வொரு அறையும்
என்னுள் இருக்கும் உறுப்புகளாய்...
மிளகாய் விதை இட்டு
முளைத்த செடிகளும் உண்டு...
திருட்டுத்தனமாய் பிடுங்கிவந்து
நட்ட பூச்செடியும் உண்டு
அப்பா அம்மா இருந்தும்
இல்லாத அந்த பருவம்
அவிழ்த்து விட்ட கன்று போன்றது...
பக்கத்து வீட்டிற்க்கும்
என் வீட்டிற்க்கும்
மதிற்சுவர் பொது என்பதால்
அடிக்கடி
அம்மாவும்,பக்கத்துவீட்டு அக்காவும்
தலையை நீட்டி பேசிக்கொண்டிருக்கும் பேச்சில்
அதிகம்
குழம்பு,கூட்டு வாசனையே
அடிக்கும்
ஒரு நாள்
இடியோடு பெய்த அடைமழையில்
வீட்டின் பின்புறச் சுவர்
இடிந்து விழுந்ததில்
பிரியமாய் வளர்த்த
நாய்க்குட்டியும்
பூச்செடிகளும்
இறந்து போகவே
அவ்வீடு ஏனோ
பிடிக்காமலேயே போய்விட்டது..
_கோபால்தாசன்
{www.thinnai.com இல் வந்தது}
0 comments:
Post a Comment