Container Icon



வணக்கம்!
விகடன் முகநூலில் நேற்று (27.08.2015) ‘பூக்காரி’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை...
                                    
                                 * பூக்காரி *
                                                       - கோபால்தாசன்


அவள் நெற்றியின் நடுவே
முழுமையான சிவப்புச் சூரியனொன்று
எந்நேரமும்
குங்குமமாய் முத்திரைப் பதித்திருக்கும்.
வாயினில் வெற்றிலைச் சிவப்பும்
கிரீச் கிரீச்சென துப்பிக்கொள்ளும்
நகைப்பினில்
பூத்தொடுக்கும்
கைகளின் விரல்களின்
அபிநயங்களின் அசைவுகளுக்கேற்ப
பூக்களின் முகங்கள் கசங்காது
வசப்படும் பாங்கு
காலையிலிருந்து இரவுவரை
அவளது முகம் வாடினாலும்
பூக்களின் முகம் வாடாது
பார்த்துக்கொள்கின்ற அக்கறை
ஒற்றை நோட்டாய்
தருவோரிடம்
‘கொஞ்சம் சில்லறையா கொடும்மா’
என கேட்கும் தொனியில்
யாரும் இரங்கிவிடுவர்
வெயிலுக்கும் மழைக்கும்
ஈடுகொடுத்து வரும் வாழ்வில்-
மற்றவர்
வாழ்வின் வாசம் பெற
ராப்பகலாய்
பூக்கூடையுடன்
மணம் பரப்பிக்கொண்டிருக்கும்
பூமகள் அவள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தீண்டாமை!
                                                                           - கோபால்தாசன்







அக்கால
சமஸ்தானத்திலிருந்து-

கொங்கை வரி இடுதல்
தெருமுனை தனி டம்ளர் குடிநீர்
தெருவில் செருப்பின்றி நடத்தல்
மாட்டு வண்டியில் செல்ல தடை
குடை பிடித்து செல்ல தடை
வாயில் சாணிப்பாலூற்றுதல்
கல்மாலை இடுதல் போன்ற

அடக்குமுறைகளை
கொடுங்கோன்மைகளை
கட்டுப்பாடுகளை விதித்திருந்த மண்ணில்

கலப்புத் திருமணம் தவறு
பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி
வேலை வாய்ப்புகளில் சாதி
சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற
தேர்தல்களில் உறுப்பினர்களை
தேர்ந்தெடுப்பதில் கூட சாதி

ஆனால்

செய்யும் தொழில்களிலும்
வாங்கும் பொருட்களிலும்
உண்ணும் உணவுகளிலும்
குடிக்கும் குடிநீரிலும்
பயணிக்கும் பேருந்துகளிலும் மட்டும்
சாதி ஏன் பார்ப்பதில்லை?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வணக்கம்!தற்போது தினமணியில் (19.8.2015) ‘முதிர்கன்னி’ என்கிற தலைப்பில் ஒரு கவிதை வெளிவந்துள்ளது... 



முதிர்கன்னி

-                                                                                                                                                                                                                    கோபால்தாசன்



 

















கூந்தலிழை ஒன்றிரண்டு
நரை கண்டு சாம்பல் நிறமாகியிருக்கும்

அகத்தைப்போல்
முகத்திலொரு வறட்சியின் கடுகடுப்பு

வார்த்தைகளில் சில கருத்துப் பிழை
வேலைகளிலும் கூட சில தடுமாற்றங்கள்

எல்லாமே
முகமுற்றல் ஒரு முப்பதுமுப்பத்தைந்தென
விரல்விட்டு எண்ணிச் சொல்லும்

பெண்ணென்று பிறந்தால்
பருவத்தில் பயிர் செய் என்பது
உண்மைதானோ...

ஆணுக்கு வயது தேவையில்லை...

இனி மாப்பிள்ளை வீட்டார்
வருவோரெல்லாமே...

மனைவியை பறிகொடுத்தவனும்;
மனைவியிடமிருந்து
விவாகரத்து பெற்றவனும்;
ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்கு
தகப்பனும்
கிழவயதை எட்டுபவனும் எல்லாருமே
ஐம்பது பவுன், பைக், வீடு, நிலம்
என பட்டியலைக் கொடுத்து

ஒரு குடும்பத்தின் இதயங்களை மொத்தமாய்
கட்டி உடைப்பதற்கு யார் காரணம்?

இது
இத்தனை நாள் பெண்ணை
வீட்டிற்குள் வைத்திருந்ததற்கான
தண்டனையா அல்லது அபராதமா?

சமூகத்தின் பார்வையில்
முதிர்கன்னி என்பவள்
ஒரு நோயாளி போலவே
காணப்படுகிறாள்...

பின்பு
அந்த சமூகமே அவளை
பரிதாப பார்வைகளை
கொஞ்சம் கொஞ்சமாய்
வீசி வீசியே
அவள் கனவோடு
உடலையும் குலைத்துப் போடுகிறது.

நெற்றியில்
குங்குமமும் கழுத்தில் மஞ்சள் கயிறும்
ஏறாமலேயே பாவம்
தன்னம்பிக்கையில்
பாறாங்கல் விழுந்து
தூக்கில் தொங்கிப் போனது
எத்தனையோ?

சரி
அப்பெண்ணிற்கு
மாங்கல்யம் கிட்டி
வாழ்ந்துகொண்டிருக்கும்
வாழ்க்கையில் மகிழ்ச்சி
திரும்பியதா?




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல்
                             -    கோபால்தாசன்













அது ஒரு வாதை
எதிர்பாராமல்
எதிரே வந்து மோதிவிட்டு நகைக்கும்.

களவு கொடுத்துவிட்டு
எப்போது கிட்டுமென ஏங்கித் தவிக்கும்
சுகம்...

அப்போது
மனம்பேசும் பேச்சுக்கு
உதடுகள் வாய் திறக்காது
எந்நேரமும்
உள்ளுக்குள் ஓர்
ஓட்டம் சாட்டம்...

அளவுக்கதிகமான
போதையாளனின் நிலையினை
ஒத்திருக்கும் பாங்கு

காமத்தின் சூட்சுமமும்
ரகஸிய தூண்டுதலின்படி
விழுகின்ற மனமானது
சிந்தையை ஏறெடுத்துக்கூட
பார்க்காமலேயே

தம்மை
முழுமையாய் ஈர்த்துக்கொள்ளும்

இயல்புடையது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS









வணக்கம்!
Tamil.WebDunia என்கிற இணையதளத்தினில் தற்போது ’நானும் ஒரு கதாநாயகிதாம்’ எனும் தலைப்பில் ஒரு கவிதை எழுதி வெளியாகியுள்ளது:

நானும் ஒரு கதாநாயகிதாம்!
                                                                                          -    கோபால்தாசன்

















என் இளமையையும்
என் முகத்தையும் கண்டு
நடிகையென
கூறாதவர் எவருமில்லை.

எதிர்பாராதவிதமாய்
தந்தை ஒரு விபத்தில் இறப்பு.
இரண்டு தங்கைகளின் படிப்பு.
அம்மா எக்ஸ்போர்ட் கம்பெனி வேலை என
தத்தளிக்கும் சமயத்தில்.

சுமை அனைத்தும்
என் தலைக்கு வந்தது.

ஒருவரின்
நேர்மையான அணுகுமுறையும்
அவரின்
அன்பான வற்புறுத்தலுக்கும்
உடன்பட்டு

கதாநாயகிக் கனவை
கழற்றி வைத்துவிட்டு
கதாநாயகனுக்கு
தங்கை எனும் வேடத்தை ஏற்றுக்கொண்டது
வாழ்வை திசைமாற்றிவிட்டது...

இனியும்
நான் கதாநாயகியாவதற்கான
தகுதியுள்ளவளா எனச்
சோதித்துப் பார்க்க வேண்டும்...

கான்வென்டில் படித்திருப்பதால்
இங்கிலீஷ் பேசவும் எழுதவும்
ஓரளவு தெரியும்...

இதுதவிர

மூன்று மொழிகள் பேசுவேன் அது
தெலுங்கு, மலையாளம், இந்தி பட
சூட்டிங் நண்பர்களோடு
பேச பழக வந்தது...

எனது
வருவாய்க்கு இதுவும் ஒரு காரணம்.

திரைக்குப் பின்னால்
வேலை செய்பவர்களுக்கெல்லாம்
வயது – முகம் ஒரு
பொருட்டே அல்ல.

என்னைப் போன்றவர்க்குதாம்
வயதும் – அழகும் முக்கியம்.

இல்லையெனில்
தூக்கி வீசிவிடுவர்.

இந்த இளமை கரைவதற்குள்
துணை நடிகை எனும் பெயர்
கழன்று விழுவதற்குள்
என் குடும்பச் சுமையை
முதலில் நான் இறக்கியாக வேண்டும்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS








வணக்கம்!
தினமணி வலைப்பூவில் ‘நான் சினிமா உதவி இயக்குனர் பேசுகிறேன்’ என்கிற தலைப்பில் தற்போது நான் எழுதி வெளிவந்திருக்கும் ஒரு கவிதை;

                                             நான் சினிமா இயக்குனர் பேசுகிறேன்!
                                                                                                                  - கோபால்தாசன்


எனக்கு வயது 29…
திருமணத்திற்கு பெண்
பார்த்துக்கொண்டிருப்பதில் கூட
ஒரு சிக்கல்
நான் சினிமா உதவி இயக்குனர் என்பதால்…
சென்னை வந்து
ஒன்பது வருடத்திற்குமேல் ஆகிவிட்டது.
இதுவரை
சின்னச்சின்ன படங்களில்
சொற்ப அளவில் வரக்கூடிய
வருமானத்தில்…
என் ஊர்க்கார
நண்பர்களின் ரூம்களில்
தங்கியிருந்தபடியே…
அம்மாவும் அப்பாவும்
எப்பவாவது மிஸ்ட்கால் கொடுத்து
பேசுவார்கள்…
சென்னையில்
பலதரப்பட்ட மனிதர்களை
சந்திப்பதில்
ஒரு மகிழ்ச்சி
ஓர் அனுபவம்…
என்னிடம்
வறுமையும், பசியும்
பல தடவை
போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது.
ஒரு சில
தயாரிப்பாளர்களிடம்
கதைகள் சொல்லி கசிந்து
வெளிவந்ததை விட.
கதைகள் சொல்லி நான்
தோற்று வந்ததே அதிகம்…
என் முயற்சியை
டீக்கடை மாஸ்டரும்
ஊர்க்கார நண்பர்களும்
எவ்வளவோ
உதாசீனப்படுத்தியிருக்கிறார்கள்…
இரவில்
மொட்டை மாடியில்
மல்லாந்து கிடந்தபடி
நிலாவை நோக்கி செலுத்தும்
என்
கற்பனைத் தேருக்கு
எதுவும் ஈடில்லை…
சினிமா என்கிற கோட்டைக்கு
வெளியே
நூற்றுக்கணக்கான பேர்
நின்றுகொண்டிருந்தாலும்…
உள்ளே
செல்பவரேதோ
ஒன்றிரண்டு பேர் தாம்
அதில் ஒருவனாய்
நான் ஏன் இருக்கக் கூடாது?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வணக்கம்!
இந்த வார கல்கண்டு (10.8.2015) வார இதழில் 'மது'வைப் பற்றி நான் எழுதி வெளிவந்திருக்கும் ஒரு கவிதை;


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS