பெண் என்பவள் ஆளப்பிறந்தவள்
- கோபால்தாசன்
Published date: 7.3.2015
பெண்தாம்
ஆணை வீட்டிற்குள் வைத்துக்கொண்டு
வெளியே போய்
இரை தேடி வந்ததாய் சேதி...
அது
இன்றும்
ஓரிரு இல்லங்களில் தொடர்கிறது.
சமூக மாற்றத்தின்
வளர்ச்சியின் பின்னே
ஆணாதிக்கத்தின் பிடியில்
வக்கிரங்களாலும்
அதிகாரங்களாலும்
பெண் அலைக்கழிக்கப்பட்டு
பந்தாடப்படுகிறாள்...
பெண் தெய்வங்கள்
அதிகமிருக்கும்
பூமியும் இதுதாம்.
பெண்ணைப் பற்றி
அதீதமாய்
பாடிய, பேசிய, எழுதிய
நாடும் இதுதாம்.
ஆனால்
பெண்ணடிமை என்பது
ஒவ்வொரு ஆணிலும்
வெவ்வேறு தினுசுகளாய்
உருவெடுத்துள்ளதே!
விளம்பரமானாலும்
விழா நிகழ்வுகளானாலும்
பெண்ணே
முன்னிலைப் படுத்தப்படுகிறது.
வீட்டிற்குள்ளோ
தட்டி அமரவைக்கப்படுகிறது.
அன்புக்கு
பெண்ணே உதாரணமாகமுடியும்
பொறுமைக்கும்
பெண்ணே காரணமாகமுடியும்
பாசத்துக்கும்
தாய்மைக்கும் பெயர்
பெண்ணின்றி வேறில்லை.
இதயத்திற்குள்
உறங்கிக் கிடக்கும்
துணிச்சலும்
தன்னம்பிக்கையும்
விழித்தெழும்போது.
ஆணின்
அடக்குமுறைகளுக்கும்
ஆணவத்திற்கும்
தீ வைக்கப்படுகிறது.
ஒரு குடும்பத்தின்
மையப்புள்ளியாக
தாங்கி நின்றாலும்.
சுற்றியிருப்போரின்
அவச் சொல்லுக்கும்
பழிச் சொல்லுக்கும்
ஆளாகுகையில்
பலமுறை இறந்து இறந்து
பிறக்கிறாள்.
பெண்ணிற்கு இலக்கணம்
கற்பென்றாலும்
அது
ஒருசில சமூகவிரோதிகளால்
களங்கப் படுத்தப்படும் போது;
ஒட்டுமொத்த சமுதாயமும்
அசிங்கமாகிவிடுகிறது.
ஒரு பெண்ணின்
வயிற்றில் சூல் கொண்டிருக்கும்
பெண்ணை
ஒரு தீக்குச்சி உட் சென்று
அழிக்க நேர்ந்தால்-
அது ஒரு
சமுதாயத்தின் வீழ்ச்சியன்றி
வேறென்ன இருக்கமுடியும்...?
0 comments:
Post a Comment