Container Icon

தமிழனுக்கொரு சரித்திரமுண்டு




தமிழன்
வசிப்பிடம் தேடிச் சென்ற தலம்
பாரதப் போர்க்களம் போல்
காட்சியளித்ததைக் கண்டோம்…
வலிமையான தேசம் இந்தியா என
மார்தட்டிக் கொள்கிறோம்.
மற்றவர்
நம் நாட்டு மக்களை
அவமானப்படுத்தியதும்,
மானபங்கம் செய்ததும்,
கருவறுக்கப்பட்டதும்,
கொன்றதுமான
காரியங்களைக் கண்டு
இன்னும் நட்புடன்
சமாதானம் பேசிக்கொண்டிருக்கிறோம்…
யாரையும்
அன்போடு வரவேற்று
உபசரிக்கும் குணம் கொண்ட
இந்தியாவின்
மனிதநேயம்
சிலர்க்கு பலவீனமாய்ப் படுகிறது
போலும்…
நேற்றைக்கும்
இன்றைக்கும் – ஏன்
நாளைக்கும்
நம் இனம் மற்றவனின்
பிடிக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு
இறக்க நேரிடும்,
அப்போதெல்லாம்
ஓர் அறிக்கை அல்லது
கண்டனக் குரல் கொடுத்து
முடங்கிப் போய்விட
வேண்டியதுதானா?
பல இலட்சம் பேர்களைப்
பறிகொடுத்துவிட்டு;
வலிகளையும், தம்
குடும்பச் சுமைகளையும்
சுமந்துகொண்டு
எங்கே
இறக்கி வைப்பதென்று
அலைந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கும்
நம் இனங்களை
கொல்லத்துடிப்பது யார்?
அதிகார தாக்குதல்களுக்கும்
ஒடுக்குமுறைகளுக்கும்
அடக்குமுறைகளுக்கும்
பிறந்தவர்களிடம்
ஈவிரக்கத்தைப் பார்ப்பது
கடினமல்லவா?
கொலை ஒரு பக்கம்
பாவம் ஒரு பக்கம்
எனச் சொல்வார்கள்
குற்றவாளி
நிரபராதியாவதும்
பழி சுமத்தப்பட்டவன்
குற்றவாளியாவதும்
நியாயமா? தர்மமா?
உலகத்தின் மூலைகளில்
எப்பக்கம் தவறு
நடந்தாலும் முதலில்
தமிழன் கழுத்துக்கே
கத்தி வைக்கப்படுகிறது.
அல்லது
விரட்டப்படுகிறான்?
தமிழன் வரலாறு
அறியாத
அறிவற்றவர்களுக்கு
சொல்லிப் பிரயோசனமில்லை….
தமிழன் வீழ்வதில்லை
என்கிற
தாரக மந்திரத்தில்
எந்த ஒரு மாற்றமுமில்லை…
தமிழன்
மிகச் சாதாரணமானவன்
எழுந்தால்
தீயிலும் கொடியவன்
அறிந்து கொள்ளட்டும்!
- கோபால்தாசன் கவிதை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment