- கோபால்தாசன்
தாய்ப்பாலுக்கடுத்து தமிழ்ப்பால்
ஊட்டிய தலமது.
ஆசிரியன் என்பதற்கான விளக்கம்
பள்ளிக்கூட அகராதியைத் தவிர
வேறெங்கும் கிடைப்பதாய்
தெரியவில்லை.
உயிரோடு உடலோடு
ஒட்டிக்கொண்டே வரும்
அழகாக வர்ணம் பூசிய
எண்ணம் கொண்ட உயிரோட்டமான
ஒரு வரைபடம்.
வாலிபம் தாண்டினாலும்
அந்த பள்ளியின் வகுப்பறை,
நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்
பெயரெல்லாம்
ஆயுளின் ஆணிவேர் வரை இறங்கி
குடிகொண்டிருக்கும்.
அத்தலம்தாம் ஒருவன்
வாழ்வின் நிறைகுறைகளை
வெட்டி திருத்தி சமப்படுத்துபவை.
அந்த ஆசிரியர்கள்தாம்
ஓர் எதிர்கால வாழ்விற்குண்டான
விதையை ஆழமாய் ஊன்றுபவர்கள்.
அங்கிருந்து கிட்டும் நட்புதாம்
இருளான சுரங்கப் பாதைக்கும்
தீப்பந்தம் ஏந்தி அழைத்துச் செல்லும்...
அங்கே
சமத்துவமும் - விளையாட்டும்
ஒன்றையொன்று
கைகுலுக்கிக்கொள்ளாத
நாளிருக்காது.
விளையாட்டில் விழுந்துபட்ட
கைகால் முட்டிக் காயம்தாம்
அப்பள்ளி தமக்கு இட்ட
முத்திரை எனப்படுகிறது.
ரொம்ப தூரமாய்
நடந்து வந்த களைப்பில் வந்து
திரும்பி பார்த்தால் -
திருமணமாகி
குடும்பத் தலைவனாகியிருப்பது
எப்படி?