Container Icon

பள்ளியும் நானும்...

                                                                             - கோபால்தாசன்


முதன்முதலில்
தாய்ப்பாலுக்கடுத்து தமிழ்ப்பால்
ஊட்டிய தலமது.

ஆசிரியன் என்பதற்கான விளக்கம்
பள்ளிக்கூட அகராதியைத் தவிர
வேறெங்கும் கிடைப்பதாய்
தெரியவில்லை.

உயிரோடு உடலோடு
ஒட்டிக்கொண்டே வரும்
அழகாக வர்ணம் பூசிய
எண்ணம் கொண்ட உயிரோட்டமான
ஒரு வரைபடம்.

வாலிபம் தாண்டினாலும்
அந்த பள்ளியின் வகுப்பறை,
நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்
பெயரெல்லாம்
ஆயுளின் ஆணிவேர் வரை இறங்கி
குடிகொண்டிருக்கும்.

அத்தலம்தாம் ஒருவன்
வாழ்வின் நிறைகுறைகளை
வெட்டி திருத்தி சமப்படுத்துபவை.

அந்த ஆசிரியர்கள்தாம்
ஓர் எதிர்கால வாழ்விற்குண்டான
விதையை ஆழமாய் ஊன்றுபவர்கள்.

அங்கிருந்து கிட்டும் நட்புதாம்
இருளான சுரங்கப் பாதைக்கும்
தீப்பந்தம் ஏந்தி அழைத்துச் செல்லும்...

அங்கே
சமத்துவமும் - விளையாட்டும்
ஒன்றையொன்று
கைகுலுக்கிக்கொள்ளாத
நாளிருக்காது.

விளையாட்டில் விழுந்துபட்ட
கைகால் முட்டிக் காயம்தாம்
அப்பள்ளி தமக்கு இட்ட
முத்திரை எனப்படுகிறது.

ரொம்ப தூரமாய்
நடந்து வந்த களைப்பில் வந்து
திரும்பி பார்த்தால் -

திருமணமாகி
குடும்பத் தலைவனாகியிருப்பது

எப்படி?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தீபத்தின் முகத்தில் மகிழ்ச்சி!

 




இதயங்களின் குபீர் சிரிப்புகளின்
வெள்ளம் இங்கே
புஷ்வாணமாய் பொங்கி வழிகிறது.

நரகாசூரனைக் கொன்ற தீ
தற்போது
வாழ்ந்துகொண்டிருக்கும் சில
அசுரர்களுக்கும்
எச்சரிக்கை சின்னம்தாம்!

வாழ்வின் பிறப்புக்காக
காத்திருப்பவர்க்கு;
இலட்சிய பனிக்குடம் உடைந்து
வெற்றி பிரசவமாகும் தருணம்.

ஒவ்வொரு
இந்தியனுக்குள் இருக்கும்
தேசப்பற்றின் அடி ஆழத்திலிருந்து
வெடிக்கும் ஜனநாயகமானது
சாலைகளில்
பட்டாசு தாள்களாய்
கைகோத்து கிடக்கின்றன.

வெடிகுண்டு மனிதர்களைக்
காட்டிக் கொடுக்க வந்த
தீப்பந்தம்
சமுதாயத்தின் மத்தியில் நின்று
ருத்ர தாண்டவம் ஆடுவது
தீவிரவாதிகளிடமிருந்து
மக்களைக் காப்பாற்றவே!

மனித உயிருக்கு
உத்தரவாதம் அளிக்க வந்த தீபம்
இனி
வீட்டிற்குள் தெய்வமாய்
வழிபட வைக்கும்!

அநியாயமும்
அக்கிரமமும் கோரத் தாண்டவம்
ஆடும் பூமியில்
நெருப்பாய் கிளைத்து
பொசுக்க வந்த தீயிது!

எந்த
மூலை முடுக்குகளிலும் கேட்கும்
பட்டாசுகளின் சப்தமானது
தலைமுறைகளின் உறவுகள்
வலுவடைவதற்கான
அடையாளம்தானே!

தீபத்தின் முகம்
மக்களின் மகிழ்ச்சியின் மூலம்
எப்போதும்
பிரகாசித்துக் கொண்டிருக்கும்
என்பதை
சொல்லவும் வேண்டுமோ?

                              - கவிஞர் கோபால்தாசன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் மனப்பாக்கெட்டில் உன் புகைப்படம்!






-கோபால்தாசன்



ன் இதழ்களின் ஓரம்
எழுதப்பட்டிருக்கும் புன்னகையில்
உன்னுடைய
சம்மதமானது என்னுள்
அடைக்கலமானது.

தனிமையின் விறகுகள்
தானாகவே தீப்பற்றிக்கொள்ளுமளவிற்கு
நீ என்ன செய்தாய்?

உன் முகவோலையில் என்
இதயத்தை வரைவதற்குள்
நான் பட்டபாடு
உனக்கெங்கே தெரியும்

அப்படியென்ன ஒரு துணிச்சல்
நீ என்னுள் சென்று
கதவடைப்பதற்கு?

கொஞ்சம் அகங்காரமும்
கொஞ்சம் மினுமினுப்பான சொற்களும்
கொண்டு என்
நெஞ்சை ஒரே மூச்சில்
குடித்துவிட்டு நிமிர்ந்தாய்…

பகலில் நீ பேசும் வார்த்தைகளையும்
இரவில் நீ உதிர்க்கும் சிரிப்புகளையும்
மொழியாக்கம் செய்ததில்;
சந்தேகமே இல்லை
நீயொரு புரியாத புதிர்தாம்.

நீ என் கனவெனும்
மலைச் சரிவுகளில் எல்லாம்
சுற்றித் திரிந்து
மகிழ்ச்சியெனும் மூலிகைகளைப் பறித்து வந்து
சாறெடுத்து தரும்
ஒரு சூட்சுமக்காரி!

காலையில் கதிரவனின்
சூடான விரல்களைப் போல் நீ
தீண்டி எழ வைக்கும் முயற்சி
எனக்குப் பிடித்திருக்கிறது.

உன் இதயத்தின் அரசாட்சியில்
எனக்கென்ன பதவி தர
தீர்மானித்திருக்கிறாய்?.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS