Container Icon


18.07.2015



அப்போது தாய் ! இப்போது சேய்!
** கோபால்தாசன் கவிதைகள் **



பள்ளிக்கூடம் பக்கமே
ஒதுங்கியதில்லை
இன்னும் சொல்லப்போனால்
அவளுடைய
பிறந்தநாளே
அவளுக்குத் தெரியாது.
அவளோடு
சண்டையிட்டுப் போனாலும்
நான் வரும் வரை காத்திருந்து
எனக்களித்து
மீதமிருப்பதை தின்றுவிட்டு
சுருண்டு கிடப்பாள்.
வாங்கிவந்த மீன்கள்
இருக்கும் வயிறுகளுக்கு
பற்றாது என்பதற்காக
குழம்பான பின்பு
ஒவ்வொரு மீனையும் மண்சட்டியில்
போட்டு இணுக்கி இணுக்கி
தருவதில் வரும் சப்தம்
வாசல் வரை கேட்கும்
என்னை
வயிற்றில் சுமந்தபடி
பய்ய பய்ய
வாய்க்காலிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
எடுத்து வந்து நீரூற்றி வளர்த்த
தென்னைமரமும்பலாமரமும்
இன்னும் அத்தடத்தில்
சென்றால் கைதட்டி அழைக்கும்.
பக்கெட்டில்
கைப்பிடி உடைந்ததென்றால்
ரெண்டு காது
போய்விட்டது என்பாள்
உடலுக்கு முடியவில்லையென்றால்
சீனமாய் இருக்குஎன்பது
வழக்குச் சொல்லாகவே
பெரும்பாலும் இருக்கும்.
என்னுடைய
பிடிவாதத்துக்கும்
கோபத்துக்கும்
அவளுடைய செய்கை
அவள் தலையில் அவளே
அடித்துக்கொள்வதுதாம்
அவளால்
கைத்தறி குழியில் நின்று
ஓடமடித்து
இயன்றவரை
கால்வயிற்று கஞ்சி ஊற்ற முடிந்தது
பிறகு
உடல் கடுத்து
நோய் கண்டு
வீழ்ந்த பின்பு
வறுமை
தாண்டவமாடியது.
வறுமையும்
பொறுமையும்
அவளின் புகலிடமாய் இருந்ததால்
இளமையிலேயே
நரைத்துப்போனாள்
தோசையையும் இட்லியையும்
பண்டிகை நாட்களில் மட்டுமே
பார்த்துவந்த எனக்கு
மற்ற நாட்களில்
அரிசி சோறுகூட
வறுமைக்கு அஞ்சி ஏனோ
தள்ளியே நின்று கொண்டது
பாவம்
மரவள்ளிக்கிழங்கும்,
மீனும் தட்டினில்
எத்தனை நாள்தாம்
இடம் பிடிப்பது?

இன்று
வறுமை தந்த
பாடமும்அனுபவமும்
பள்ளிக்கூடம் தராத
வாழ்க்கைப் பாடமாகிவிட்டது தாயே!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இன்னும் உயரம் செல்ல வேண்டும்!
-    nfhghšjhr‹




அவர்கள்

வேதனையை மறக்கவும்
வலிகளிலிருந்து மீளவும்
மதுவிலும்
போதை மருந்துகளிலும் விழுந்து
தம்மைத் தொலைத்துக்கொள்கிறார்கள்.

அவர்கள்
வீட்டில் அடைந்துகொள்வதற்கு முன்
வழியில் ஒரு சண்டை
பிறகு
மனைவியோடு ஒரு சண்டையுடன்
அவ்விரவை
முடித்துக்கொள்கிறார்கள்...

வாங்கும் கூலியும்-
செய்யும் செலவுகளுக்கு
ஈடு கொடுக்க முடியாமல்
வட்டியிலும் கடனிலும்
பிதுங்கி நெளிவதுதாம்
வாழ்வின் சிறப்பு.

யார் பெற்ற பிள்ளையோ
ரோட்டில் குடித்துவிட்டு
வாந்தியோடு விழுந்து
கிடக்கிறதென
முனகிக்கொண்டு செல்லும்
பாதசாரிகள்.


அடுத்த வேளை
உணவிற்கே கேள்விக்குறியாக
கால்களற்ற நிலையில்
தரையில் புரண்டு புரண்டு
பிச்சையெடுப்பவனைப்
பார்த்து
ஒரு வெளிநாட்டுக்காரன் ஆங்கிலத்தில்
சொல்கிறான்:

பாவம் ... இந்தியா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS