கோபால்தாசன்
இன்னும்
அழகழகாய் பூத்திருந்தது
அவள் முகச்செடியிலிருந்து
புன்னகைப் பூக்கள்.
அன்று, அப்போதுதாம்.
முதன்முதலாய் பார்க்கிறோமா என்கிற
ஒரு சந்தேகமும், பரவசமும்.
இதுவரை அவள் சாயலில்
வேறு யாரையோ பார்த்து
நன்றாக பழகியது போன்ற ஓர்
உள்ளுணர்வு.
நேரம் கடக்கிறது.
அவள் எதற்காக
அங்கே நிற்கிறாள் என்பது
தெரியவில்லை.
எனக்குள்
அந்த இடத்தை விட்டு கொஞ்சமும்
விலகக் கூடாது என்பதே
வேண்டுதல்.
அவள் மஞ்சள் நிறத் தேகத்திற்கேற்ற
ஆடைநிறம். காதோடு ஒட்டிக்கொண்டதொரு
சிவப்புநிற பிளாஸ்டிக் கம்மல்.
யாரையோ
எதிர்பார்த்து நிற்கிறாள் என்பது மட்டும்
புரிகிறது.
யாருக்காக, எதற்காக?
மழைத் தூறல் பார்வைக்கு
திரையிட்டு மறைக்க மறைக்க
அவள்
கொஞ்சம் கொஞ்சமாய்
மறைந்து கொண்டிருக்கிறாள்…
என் தோளை யாரோ
தட்டும் உணர்வில்;
திடுக்கிட்டு திரும்புகிறேன்…
அவளே தாம்.
“எப்படியிருக்கீங்க
என்னத் தெரியவில்லையா?
நான் தான் லட்சுமி அம்மா
பொண்ணு.”