
சித்திரைக்கு சேதி சொல்லு... கண்ணால!
By கவிஞர் கோபால்தாசன்
First Published : 12 April 2013 07:37 PM IST
ஆடு மாட மேச்சி மேச்சி
காலும் கையும் கழன்று போச்சு - என்
மாமன் பொண்ண சேத்துக் கிட்டு
மார்த் தாண்ட சந்த யாச்சு!
கோழி வித்த காச வச்சு
கஞ்சிப் பான வாங்க வந்து - என்
நாக்கு சுட்ட வார்த்த யால
நெஞ்ச ஒடச்சா பான போல!
எங்க ரெண்டு சண்ட யில
ஆடு ரெண்டும் ஓடிப் போச்சு - என்
மாமன் பொண்ணு மல்லுக் கட்ட
மச்சக் காள நானும் நிக்க!
தோப்புக் குள்ள ஆளும் இல்ல
விலக்கி வைக்க யாரு மில்ல - என்
துண்டக் கூட காண வில்ல
சண்ட உச்சம் செருப்பு மில்ல!
ஒத்த வரப்பு எதிர வந்து
ஒத்த கண்ணா சாட செஞ்சு - என்
நெஞ்சு பரப்பு எல்லாத் தையும்
மொத்த மாக சுருட்டிட் டாளே!
வாய்க் காலுல வெள்ளம் பாய
வேட்டி போட்டு மீனத் தேட - அவ
கண்ணு ரெண்டு மீனே யின்றி
வேற ஒண்ணும் சிக்க வில்ல!
உழுது போட்ட நிலத்தப் போல
என்னெ கடஞ்சிப் போற வளே - உன்
மாமன் காரன் இங்கி ருக்க
மனச பிடுங்கி எங்க போறா?
பாக்க பேச சண்ட வரும்
பாக்க வில்ல ஏக்கம் வரும் - இது
ரொம்ப ஒண்ணும் புதுசு இல்ல
பழகிப் போன புளிச்ச கத!
(கவிஞர் கோபால்தாசன் கவிதைகள்)
0 comments:
Post a Comment