Container Icon

விழுந்த கட்டடம்; உதிர்ந்த பூக்கள்…!

விழுந்த கட்டடம்
உதிர்ந்த பூக்கள்…
உடன் உலை வைக்கலாம்
எனக் காத்திருந்த தாய்க்கு
இடிவந்து சேர்ந்ததோ..?
பள்ளிக்குப் போன பிள்ளைக்கு
பீஸ் கட்ட பணம் வேண்டும்
நாளைதாம் கடைசி நாள்
எனச்
சொல்லி அனுப்பி விட்டு
இருந்த மனைவியின் காதிற்கு
கணவனின்
மரணச் செய்தி  வந்ததோ?
நம்பிக்கைகள் யாவும்
வேகுதடா!
உயிர்கள் ஒவ்வொன்றும்
இடிபாடிற்குள் சிக்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
கசியுதடா…
மண்ணோடு புதையுண்டு போனவன்
அரை உயிர் கொண்டு வருவானோ அல்லது
முழு உயிர்கொண்டு பிழைப்பானோ என
ராப்பகலாய் இமை மூடாது
நெஞ்சில் கடைசித் துளி
நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கும் ஈரவிழிகள்…
இத்தனை திங்களாய்க் கொண்ட
உழைப்பின் முடிவாய்
உயிரையும் மாய்த்தாயோ?
இடிமழைக்குப் பயந்து
ஒதுங்கிய கட்டடம்
உயிர்களைப் பறிக்குமோ?
எந்தக் குப்பை மேடானாலும்
எந்த சாக்கடையோரமானாலும்
சாக்குப் பையையே
போர்வையாகக் கொண்டு உறங்குவானே!
பகல் பணி முடித்து
இரவுப் பணி என்றாலும்
கண்ணுறக்கம் கொள்ளாது.
கடமையை முடிப்பானே!
உடைந்த ஹெல்மெட்டோடும்
கிழிந்த பூட்ஸுகளோடும்
கலவையைக் கலக்கும்போது
பாதங்களை
சிமிண்ட் பால் தின்று போன
மிச்சத்தோடும்
கால்பெருவிரலில் கல்விழுந்த
நகப்பெயர்வுகளோடும்
மறுநாளும் பணிக்கு
வந்து நிற்பானே…!
கடுமையான உழைப்பில்
சுகம் உண்டென்றும்
ஏழ்மையான வாழ்வில்
மகிழ்ச்சி உள்ளதென்றும்
உணர்த்துபவனே!
அந்தக் கட்டடத்தின் வேரினில்
உன்னுடைய வலிகளோடும்
குடும்பச் சுமைகளோடும்
உரமாகிப் போனாயே… தோழா!
முதலாளி வர்க்கம் கொண்ட
பேராசையின் உச்சம்…
ஏழையின் உயிரை
தோழமையின் சிதைவை
காவு கொண்டதடா!
- கவிஞர் கோபால்தாசன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS